பாட்டி வைத்தியம் / கைவைத்தியம்

உணவே மருந்து என்ற காலம் போய் பலருக்கு மருந்தே உணவு ஆகிவிட்டது. முன்பெல்லாம் நோய் வந்தால் மாத்திரம் மருந்து உட்கொண்டார்கள். இப்போதோ அதிகம் உண்டு சமிக்காவிடில் மருந்து. காச்சலுக்கு மருந்து, பீச்சலுக்கு மருந்து, உடல் நோ என்றால் மருந்து. மருந்துகளால் பக்கவிளைவு. பக்கவிளைவை தீர்ப்பதற்க்கு மேலும் மருந்து. அன்று கையில் மருந்து இன்று பையில் மருந்து. குழந்தை முதல் முதியவர் வரை மருந்துக்கு அடிமைப்பட்டுள்ளார்கள்.

பயிர்களுக்கு இரசாயன உரம், பூச்சி கொல்லிகளின் பக்க விளைவுகளை உணர்ந்து மேலைநாடுகளில் இயற்கை உரம், இயற்கை பூச்சி கொல்லி பாவித்து விளைந்த உணவுக்கு கிராக்கி அதிகம். உணவிலே இரசாயனக் கலப்பை முற்றாக தவிர்க்க முயற்சி செய்கிறோம். ஆனால் அவசியமற்ற மருந்துகளை தயக்கமின்றி உட்கொள்கிறோம். கைமருந்து எல்லா நாடுகளிலும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் அவர்களுக்கு இலகுவில் கிடைக்கும் பொருள்களை மூலம் அனுபவரீதியாக பெற்ற மருந்துகள் உண்டு.

பாட்டி வைத்தியம், கைமருந்து பற்றி பல புத்தகங்கள் உண்டு. இணையதளத்தில் உள்ள தகவல்களுக்கு தொடர்பு தரப்படும். இப்பக்கத்தில் ஆசிரியர் குழு, வாசகர்கள் சொந்த அனுபவத்தில் பாவித்த கைமருந்துகளும் தரப்டும்.

  • காய்ச்சல், ஜலதோசம், தலைவலி, இருமல், சளி
  • வயிறு சம்பத்தப்பட செரிமானம், வலி, பேதி, பொருமல், பசியின்மை
  • சித்தரத்தை, அதிமதுரம், அரிசி-திப்பிலி, வால்மிளகு, ஓமம், சுக்குதூள், சீரகத்தூள், தேங்காய்ப்பால், பனம்கற்கண்டு(கல்லக்காரம்), பனைவெல்லம்(பனங்கட்டி)

இருமல், சளி

தேவையான பொருள்கள்

  • திப்பிலி 10 கிராம்
  • சித்தரத்தை 10 கிராம்
  • வால்மிளகு 10 கிராம்
  • அதிமதுரம் 10 கிராம்

செய்முறை

சித்தரத்தை, அதிமதுரம் 3 மணித்தியாலம் நீரில் ஊறவைத்து அம்மி அல்லது சிறு உரலில் தட்டவும். வால்மிளகு, திப்பிலியை வேறாக தட்டவும். அவற்றை 3 கப் (750 ml) நீரில் கலந்து மிதமான வெப்பத்தில் 1 கப் (250 ml) ஆகும் வரை வத்த காச்சவும். வடித்த சாற்றை 6 சம பங்குகளாக பிரித்து காலையும் மாலையும் சாப்பிட ஒரு மணித்தியாலம் முன் மூன்று நாட்கள் குடிக்கவும். சாற்றை குடித்தவுடன் 1/4 (கால்) கப் காச்சிய பாலை சிறுகச், சிறுக உறிஞ்சிக் குடிக்கவும். சளி கரைந்து செல்வதை உணர்வீர்கள்.

தேவையான பொருள்கள்

  • உளுத்தம்மா 1/4 கப்
  • அரிசிமா 1/4 கப்
  • மிளகுத்தூள் 1 தே.க.
  • சீரகத்தூள் 1 தே.க.
  • பனங்கட்டி தூள் 50 கிராம்
  • தேங்காய்பால் 1 கப்
  • நீர் தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் உளுத்தம்மா, அரிசிமா, மிளகுத்தூள், சீரகத்தூள் நன்கு கலக்கவும்.
தூளாக்கிய பனங்கட்டியை சுடுநீரில் கரைத்து வைக்வும்.
கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் பாலில் 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
மாக்கலவையை சிறிது சிறிதாக சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பனங்கட்டி கரைசலையும் சேர்த்து சூடாக்கி அடுப்பை அணைத்து இறக்கவும்.
சுட சுட சாப்பிட்டால் நன்மை அதிகம்.

நன்றி:ajantha https://ajanthacake.blogspot.com/2017/11/blog-post.html

தேவையான பொருள்கள்

  • மிளகு 7 தூளாக்கியது
  • ஏலக்காய் 2 தூளாக்கியது
  • சுக்குபொடி 1 தே.க.
  • பனங்கட்டி தூள் 50 கிராம்
  • தேங்காய்பால் 1 கப்
  • நீர் தேவைக்கேற்ப

செய்முறை

கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் பாலில் மிளகு, ஏலக்காய், சுக்கு(வேர்கொம்பு), பனங்கட்டி சேர்த்து சூடாக்கி குடிக்கவும்.

நன்றி sarasus samayal https://www.youtube.com/watch?v=XbkfjfCONrU

நன்மைகள்: இருமலுக்கு உகந்தது

தேவையான பொருள்கள்

  • பால் 2 கப்
  • உள்ளி 10 பல்லு
  • இஞ்சி (1/2 inch)
  • மிளகு 5
  • சீரகம் 1/4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  • பனம்கற்கண்டு 1 மே.க.

செய்முறை

மிளகு, சீரகத்தை அம்மி அல்லது சிறு உரலில் தட்டி பின் இஞ்சி, உள்ளியும் சேர்த்து தட்டி மஞ்சள், கற்கண்டுடன் பாலில் கலந்து கொதிக்கவைக்கவும். கொதித்தவுடன் அடுப்பு வெப்பத்தை குறைத்து 1 கப் ஆகும் வரை சுண்டக்காச்சவும். இளம்சூட்டோடு குடிக்கவும். பாலில் உள்ள உள்ளியையும் சாப்பிட்டால் நல்லது.

வயிற்று ஊபாதைகள்

நன்மைகள்: செரிமானம், வாய் நாற்றம், தடிமல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு

தேவையான பொருள்கள்

  • ஓமம் விதை 1 தே.க.
  • சீரகம் 1 தே.க.
  • நீர் 1 கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஓமம், சீரகம் நீரில் இரவு ஊறவிடவும்.
காலையில் கனமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் ஒரு கொதிவந்ததும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.